
சென்னை:
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி பிரசாரம் செய்தார்.
பெரம்பூர் காந்தி சிலை அருகே திறந்து வேனில் நின்று பேசியது:-
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் கொளத்தூர் தொகுதிதான் முதன்மையானது. இந்த தொகுதி மக்கள் கொடுத்து வைத்தவர்கள் ஏற்கனவே, மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த போது பல்வேறு திட்டப்பணிகளை நிறைவெற்றியுள்ளார். துணை முதல்-அமைச்சராக இருந்தும் ஏராளமான பணிகளை செய்திருக்கிறார்.
இந்த கூட்டணி சமூக சமத்துவ கூட்டணி. எதிர் கூட்டணி சினிமா கூட்டணி, அது உண்மையான கூட்டணி அல்ல. பா.ம.க. வின் கொள்கை உண்ண உணவு, உடுக்க உடை தரமான மருத்துவ சேவை அளிப்பதுதான். தி.மு.க. அரசு அதை நிறை வேற்றி வருகிறது. 6-வது முறையாக கலைஞர் முதல்- அமைச்சர் ஆவது உறுதி. இந்த அரசு சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்து இருக்கிறது. தமிழகம் முழுவதும் இந்த கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுகிறது. இது சுனாமியாக மாறி மாபெரும் வெற்றியை தரும். ஆடு, மாடுகளை தருவதாக அ.தி.மு.க.வினர் கூறுகிறார்கள். இன்னும் மக்களை பின் நோக்கி கொண்டு செல்லுகிறார்கள். இது மக்களை ஏமாற்றும் கூட்டணி.
5 ஆண்டுக்கு ஒரு முறை தான் ஜெயலலிதா வெளியே வருவார். பின்னர் கொடநாடு சென்று விடுவார். கொளத்தூர் தொகுதி வி.ஐ.பி. தொகுதி மட்டுமல்ல வி.வி.ஐ.பி. தொகுதி ஆகும். முதல்வர் தொகுதி என்று கூட சொல்லலாம். ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் அமோக வெற்றி பெறுவார். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் வேட்பாளர் அவர்தான். இவ்வாறு அன்புமணி பேசினார்.
முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. மூர்த்தி, வட சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் வி.எஸ்.பாபு, பகுதி செயலாளர் வி.எஸ். ரவி, கு.க.செல்வம், பாண்டியன், சுரேஷ், கொளத்தூர் பகுதி பா.ம.க. அமைப்பு செயலாளர் வி.ஜெ.சுரேஷ் ஆகியோர் உடன் சென்றனர். கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார்.
இன்று 51-வது வட்டம் தில்லை நாயகம் தெருவில் முஸ்லிம் மகளிர் அமைப்பு பெண்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். மகளிர் அமைப்பை சேர்ந்த மொபினா ஹாஜி மற்றும் அமான் ஆகியோரிடம் ஓட்டு சேகரித்தார். பின்னர் 50-வது வட்டம் செல்லியம்மன் நகர் பகுதியில் ஆதரவு திரட்டினார். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வீடாக சென்று தன் கணவருக்காக ஓட்டு கேட்டார். ராம்நகர், ஆர்த்தி குடியிருப்பு பகுதிகளில் அவர் ஓட்டு வேட்டையாடினார். அவருடன் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன், கவிஞர் சல்மா, வக்கீல் கிரிராஜன், கவுன் சிலர் மாலினி ரமேஷ், பக்கிரி சாமி, செல்வம், அர்ச்சுனன், வக்கீல் சின்னராஜ், பாபு உள்பட பலர் சென்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக