பா.ம.க.வினர் திண்ணை பிரசாரம் செய்து மக்களிடம் ஆதரவு திரட்ட வேண்டும்: டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: 

        எந்தக் கூட்டணியில் இடம்பெற்றாலும் பாமகவுக்கு 45 தொகுதிகள் வேண்டும் என்றார் டாக்டர் ராமதாஸ்.

          திருமுல்லை வாயலை அடுத்த சோழம்பேடு பகுதியில் ஆவடி மற்றும் மதுரவாயல் தொகுதி பா.ம.க. கிளை நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. 

கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதது:

            வருகிற சட்டசபை தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிடாது. கூட்டணி அமைத்துதான் போட்டியிடுவோம். நீங்கள் எத்தகைய கூட்டணி அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ அதே போன்ற கூட்டணி அமையும். கூட்டணி பற்றி இன்னும் 10 நாளில் அறிவிப்பு வெளியிடுகிறேன். எந்தக் கூட்டணி என்றாலும் பா.ம.க.விற்கு மொத்தம் 45 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய கோருவோம். திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 10 தொகுதிகள் உள்ளன. இவற்றில் குறைந்தது 3 தொகுதிகளையாவது பா.ம.க.வுக்கு ஒதுக்கும்படி கோருவோம்.

பிளான் முக்கியம்...

              சட்டசபை தேர்தலையொட்டி இப்போதிருந்தே மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும். பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் மைக்ரோ பிளானிங் எனப்படும் நுண் திட்டமிடல் முறையை பின்பற்றி 2-வது இடத்தை பிடித்தோம். அதே போல் வரும் தேர்தலிலும் திட்டமிட்டு நாம் பணியாற்ற வேண்டும். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் திருவள்ளூர் மாவட்டத்தில்தான் பா.ம.க. அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் பா.ம.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் அதிகம் உள்ளன.

திண்ணைப் பிரச்சாரம்....

           பா.ம.க.வினர் திண்ணை பிரசாரம் செய்து மக்களிடம் ஆதரவு திரட்ட வேண்டும். ஆவடி தொகுதிக்கு மாநில துணை பொதுச் செயலாளர் சிவகோவிந்த ராசும், மதுரவாயல் தொகுதிக்கு மாவட்ட செயலாளர் கே.என்.சேகரும் தலைமை தேர்தல் பணிக்குழு அமைப்பாளர்களாக அமர்த்தப்படுகின்றனர். தேர்தலில் நாம் தனித்து நின்றே வெற்றி பெற முடியும் என்றாலும் கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவு செய்திருக்கிறோம். 

          பிரசாரத்தின்போது கூட்டணி கட்சிகளின் கொள்கைகளையும், நமது கட்சி கொள்கைகளையும் சேர்த்து பிரசாரம் செய்யவேண்டும். பிப்ரவரி மாதத்திற்குள் தொகுதி மாநாடுகளை நடத்த வேண்டும். அதிக எண்ணிக்கையில் இளைஞர்களை அழைத்து வந்து கட்சியில் சேர்க்க வேண்டும்.", என்றார்.

0 கருத்துகள்: