பொது இடங்களில் புகைபிடிக்க தடை செய்யும் சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

பொது இடங்களில் புகைபிடிக்க தடை செய்யும்

 

 சட்டத்தை தீவிரமாக்க வேண்டும்;

 

 டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

     
 
சென்னை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-
              உலக புகையிலை எதிர்ப்பு நாளை கடைப்பிடிக்கப்படுகிறது. புகைப்பிடிப்பதாலும், புகையிலை பொருட்களை பயன் படுத்துவதாலும் அடுத்தவர் வெளியிடும் புகையை சுவாசிப்பதாலும் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் 10 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். புகை தீமைக்குறித்து எத்தனையோ வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், விளக்கை தேடிச் செல்லும் விட்டில் பூச்சிகளை போல புகையிலை பொருட்களுக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையும், வேதனையும் அளிக்கிறது.

                மருத்துவர் அன்புமணி ராமதாசு மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது புகையிலை நிறுவனங்களுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி, புகையிலை பொருட்களின் உறைகளின் மீது எச்சரிக்கை படம் வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்தார். வரும் டிசம்பர் மாதம் முதல் அப்படங்கள் இன்னும் கடுமையாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது மருத்துவர் அன்புமணி ராமதாசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.

          எச்சரிக்கை படங்களை வெளியிடுவதால் புகையிலை பொருட்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறையும் என்ற போதிலும் இதுமட்டுமே போதுமானதல்ல. மருத்துவர் அன்புமணி ராமதாசு முயற்சியால் 2008-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட, பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டம் தொடக்கத்தில் தீவிரமாக செயல்படுத்தப்பட்ட போதிலும் காலப் போக்கில் அது கைவிடப்பட்டுவிட்டது. புகைப்போருக்கு இணையாக அவர்கள் விடும் புகையை சுவாசிப்பவர் களுக்கும் அதிக பாதிப்பு ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.

              பள்ளிகள் கல்லூரிகளிலிருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்ற விதியும் பெயரளவிலேயே உள்ளது. இதை மிகக் கடுமையாக செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புகையிலை பொருட்கள் தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் தடை செய்வதுடன், புகையிலை பொருட்கள் மீதான வரிகளையும் அதிகரிக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்பு என்பது யாரோ சம்பந்தப்பட்ட விசயம் என்று எண்ணாமல், நம் அனைவரையும் பாதிக்கும் தீங்கு என்பதை உணர்ந்து சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் புகையிலைக்கு எதிராக போராட முன்வரவேண்டும்.  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.


0 கருத்துகள்: