மக்களுக்கு நேர்மையாக சேவை செய்ய உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.மக. வேட்பாளர்களுக்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள்: ஜி.கே.மணி வேண்டுகோள்

சேலம்:

        உள்ளாட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் நேர்மையாக சேவை செய்ய பயிற்சியளித்து அனுப்புவோம். உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க.வுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று மாநில தலைவர் ஜி.கே.மணி வேண்டுகோள் விடுத்து உள்ளார். 
இது தொடர்பாக மாநில தலைவர் ஜி.கே.மணி  வெளியிட்டு உள்ள அறிக்கை:

           தற்போது நடைபெற உள்ள
தேர்தல் நாடாளுமன்ற, சட்டமன்ற பொது தேர்தல் அல்ல. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தேர்தலும் அல்ல. பொதுமக்களின் அடிப்படை தேவைகளை, அன்றாட பிரச்சினைகளை நிறைவேறுவதற்கு உரிய தேர்தல். மத்திய ஆட்சி, மாநில ஆட்சி ஆகியவற்றை போல் உள்ளாட்சி ஒரு அரசாங்க தகுதியுடன் கூடுதல் அதிகாரம், தேவையான நிதி ஆதாரங்களுடன் செயல்படும் நிர்வாக அமைப்பாக இருக்க வேண்டும். 
            மத்திய அரசு ஒரு அடுக்கு, மாநில அரசு ஒரு அடுக்கு, உள்ளாட்சி அரசு ஒரு அடுக்கு என்ற மூன்று அடுக்கு அரசு என்ற நிலை உருவானால்தான் உள்ளாட்சியை நல்லாட்சியாக அதிக அதிகாரங்களுடன் போதுமான அளவு நிதி ஆதாரங்களுடன் நிர்வாகம் செய்ய முடியும். அதற்காக குரல் கொடுத்து போராடி வரும் கட்சிதான் பாட்டாளி மக்கள் கட்சி. உள்ளாட்சியில் வெற்றி பெறும் பா.ம.க. பிரதிநிதிகளுக்கு தைலாபுரம் தோட்டம் பா.ம.க. அரசியல் பயிலரங்கத்தில் தலைமைப்பண்புகள், ஆளுமை பண்புகள், குழு இயக்கவியல், சாதனையாளர் என்பது போன்ற தலைப்புகளில் பயிற்சி கொடுக்கப்படும். 
           சுருக்கமாக சொன்னால் இது என் நாடு, என் நாட்டு மக்கள், என் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் என்னால் இயன்ற அளவு சேவை நோக்கத்துடன், அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என்று பயிற்சி கொடுத்து பொறுப்பேற்க செய்வோம்.   பா.ம.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் உண்மையாகவும், நேர்மையாகவும் சேவை செய்யவும் பயிற்சியளித்து அனுப்புவோம். எனவே கட்சி வித்தியாசம் பாராமல், உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு வாய்ப்பினை தாருங்கள்.
             ஒரு மாற்றத்தை கொடுங்கள்.  விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், வியாபாரிகள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், படித்தவர்கள், பண்பாளர்கள், தொழில்முனைவோர் என எல்லா தரப்பினரும் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் அனைத்து பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுங்கள்.

          மாம்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள். வெற்றி பெற செய்யுங்கள். உள்ளாட்சியில் பா.ம.க.வுக்கு ஒரு வாய்ப்பினை தாருங்கள் என அனைத்து வாக்காளர்களையும் பணிவுடன் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.   

0 கருத்துகள்: