சேலம்:
சேலத்தில் திறப்பு விழா செய்யப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை ஓராண்டுக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராவிட்டால் பாமக போராட்டம் நடத்தும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரித்தார்.
சேலத்தில் வியாழக்கிழமை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியது:
பாமகவை சேர்ந்த வேலு மத்திய இணையமைச்சராக இருந்தபோது சேலத்துக்கு ரயில்வே கோட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் கோட்டம் வந்த பிறகு எந்தப் பணிகளுமே நடைபெறவில்லை. இத்தனைக்கும் இந்த கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் மாநில அமைச்சர்கள் 7 பேர் உள்ளனர்.
இதுவரை ரயில்வே கோட்டத்துக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அலுவலகம், குடியிருப்புகள் கட்டப்படவில்லை. இதேபோல் டாக்டர் அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது சேலத்துக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொண்டு வரப்பட்டது. அண்மையில் நடைபெற்ற விழாவில் மாநில அமைச்சரே இதை ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் இந்த மருத்துவமனை முழு அளவில் செயல்பட ஓராண்டு ஆகும் என்று கூறப்படுகிறது.
ஓர் ஆண்டுக்குள் இந்த மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை என்றால் இதைக் கண்டித்து போராட்டங்களில் ஈடுபடுவோம். கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்தும் வகையில் பாமகவில் இளைஞர்களை சேர்த்து, அரசியல் பயிற்சி கொடுத்து வருகிறோம். எங்கள் கட்சியில் பொறுப்புகளில் உள்ள யாரும் மது, போதைப் பழக்கங்களுக்கு அடிமையானவராக இருந்தால் அவர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும். சேலம் அருகே ஒரே குடும்பத்தில் 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற்று உண்மைகள் வெளியே வர வேண்டுமானால் வழக்கு விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக