சேலத்தில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

சேலம்:

           ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 3 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி பாமக சார்பில் சேலத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

           சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார்.

போராட்டத்தில் தலைவர் ஜி.கே.மணி பேசும்போது, 

             3 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள், கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பல்வேறு அமைப்புகள், மாணவர்கள், வழக்குரைஞர்கள் என பலதரப்பட்டவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மூவருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை உயர் நீதிமன்றம் 8 வாரத்துக்கு தடை செய்துள்ளது. இதன் பிறகு என்ன ஆகும் என்று தெரியவில்லை. ஒருவேளை மீண்டும் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டால் அதை எதிர்த்து மீண்டும் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். 

           இதற்கிடையே வரும் 14-ம் தேதி திருச்சியில் தமிழ் அமைப்புகளின் சார்பில் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி மாநாடு நடத்த உள்ளோம். இதில் ராமதாஸ்  கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.  போராட்டத்தில் மூவரின் தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

0 கருத்துகள்: