பா.ம.க.வை கலைத்துவிடுவேன்: ராமதாஸ்


திருக்கோவிலூர்:
 
              பா.ம.க. கொள்கை போல வேறு எந்தக் கட்சியிலாவது உயர்ந்தக் கொள்கை இருக்கிறது என்று அறிஞர்கள் தீர்ப்பளித்தால் அக் கட்சியில் நான் முதலில் சேருவதுடன், பா.ம.க.வை கலைத்து விடுவதற்கு தயாராக உள்ளேன் என கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். முகையூர் பா.ம.க. எம்.எல்.ஏ. கலிவரதன் மகள் திருமணம் திருக்கோவிலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
 
இதில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது: 
 
                        பெரியாரின் புரட்சியால் நீதிக்கட்சி உருவான காலத்தில் வகுப்புவாரியாக பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது. பின்பு, காமராஜரும், பெரியாரும் சேர்ந்து அடிதட்டில் வாழ்கிற மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டனர். பெரியாரின் இத்தகைய போராட்டத்தால் எல்லா சமுதாயத்தினருக்கும் இன்றைக்கு வேலை கிடைத்துள்ளது. இது போதாது.இங்கு நடைபெற்ற கலப்புத் திருமணத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஜாதியை நாங்கள் மறந்துவிட்டோம், எங்களுக்கு ஜாதி ஞாபகமே வரவில்லை என்ற நிலைமை வரும்பட்சத்தில், ஜாதியை முதலில் மறப்பவர்கள் வன்னியர்களாகத்தான் இருப்பார்கள். பா.ம.க. கொள்கை மாதிரி வேறு எந்தக் கட்சியிலாவது உயர்ந்தக் கொள்கை இருக்கிறது என்று அறிஞர்கள் தீர்ப்பளித்தால் அக் கட்சியில் நான் முதலில் சேருவதுடன், பா.ம.க.வை கலைத்து விடுவதற்கு தயாராக உள்ளேன்.சமூக நீதிக்காகவும், சமூக பொருளாதார மாற்றங்களுக்காகவும், அரசியல், பண்பாடு எல்லாவற்றுக்கும் உரக்க குரலெழுப்புவதற்கு பா.ம.க.வைவிட சிறந்த கட்சி வேறு எதுவும் இல்லை.இந்நிலையில் மொழியை, தமிழினத்தை உயர்த்திப் பிடிக்கிற, சமூக மாற்றத்துக்காக பா.ம.க. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் சமுதாய மத நல்லிணக்க மாநாட்டை நடத்தி உள்ளது என்றார் டாக்டர் ராமதாஸ்.இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, மாநிலத் தலைவர் கோ.க.மணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்: