பதிவு மூப்பு முறையில் பணி: பாமக கோரிக்கை

                   மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் தேவை என, பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

                   தமிழகத்தில் 1992 முதல் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து முடித்தவர்களும், அதற்குப் பிறகு படித்தவர்களும் வேலை வாய்ப்பில்லாமல் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 45 வயதை கடந்தவர்கள் அதிகம் உள்ளனர். இந்த நிலையில் தற்போது, மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் என தொடர்ந்து நடைமுறையில் இருந்து வந்த நிலைக்கு மாறாக மாநில பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், 50, 55 வயது ஆனாலும் கூட வேலைவாய்ப்பு கிடைப்பது அரிதாகிவிடும்.

                    இதற்காக, சம்பந்தப்பட்டவர்கள், சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார்கள். இது இரவு நேரத்திலும் நீடித்து வருகிறது. இவர்களின் பரிதாப நிலையை உணர்ந்து வேலை வாய்ப்பை தமிழக அரசு வழங்க வேண்டும். மாநில அளவிலான பதிவு மூப்பு என்பதற்கு நீதிமன்ற காரணம் காட்டி தட்டிக்கழிக்காமல் காலம் காலமாக இருந்து வந்த நடைமுறை தொடர அரசு கொள்கை முடிவெடுத்து மீண்டும் மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் என்ற நிலையை உருவாக்க வேண்டும். உண்ணாவிரதம் இருந்து வரும் ஆசிரியர்களும், அதனை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜி.கே. மணி கூறியுள்ளார்.

0 கருத்துகள்: