கடந்த 43 ஆண்டுகளாக சினிமாக்காரர்கள் தான் தமிழகத்தை ஆளுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். நடிகர்கள் டூப் போட்டு சண்டை போடுகின்றனர். அவர்கள் உண்மையான வீரர்களாக இருந்தால் என்னுடன் நேருக்கு நேர் மோதி பார்க்கட்டும் என்று அன்புமணி ராதாஸ் கூறினார். பா.ம.க., சார்பில் மேட்டூர், மேச்சேரியில் இளைஞர், இளம்பெண்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி,
கிராமங்களில் பிற கட்சிகளில் வன்னியர்கள் உள்ளனர். வன்னியர் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள், இளம் பெண்கள் பிற கட்சிகளில் உள்ள வன்னியர்களை நமது கட்சியில் இணைக்க வேண்டும். கிராமங்களில் பா.ம.க.,வை தவிர வேறு எந்த கட்சியும் இருக்கக் கூடாது.
நான் ஒன்றரை மாதத்தில் மீண்டும் கிராமங்களுக்கு வருவேன். அப்போது, கட்சிக்காக பாடுபட்ட பழைய நிர்வாகிகளுக்கு சால்வை போர்த்த வேண்டும். நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மீண்டும் பா.ம.க.,வில் இணைக்க வேண்டும். அதற்கு கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும்.
கடந்த 43 ஆண்டுகளாக சினிமாக்காரர்கள் தான் தமிழகத்தை ஆளுகின்றனர். இன்றைய இளைஞர்கள் நடிகர்களின் கட் அவுட்டிற்கு பால், பீர் அபிஷேகம் செய்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். நடிகர்கள் டூப் போட்டு சண்டை போடுகின்றனர். அவர்கள் உண்மையான வீரர்களாக இருந்தால் என்னுடன் நேருக்கு நேர் மோதி பார்க்கட்டும்.
மத்தியில் இருந்த 80 அமைச்சர்களில், உலக அளவில் மூன்று விருது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த எனக்கு மட்டுமே கிடைத்தது. தமிழகத்தில் 15 ஆண்டுக்கு முன் 8 கோடி லிட்டர் சாராயம் குடித்தனர். தற்போது 36 கோடி லிட்டர் சாராயம் குடிக்கின்றனர்.மது குடித்தே 25 வயதிற்குள் இறந்து போகின்றனர். இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகக் கூடாது.மத்திய சுகாதார அமைச்சராக இருந்து 110 கோடி பேருக்கு திட்டங்கள் வகுத்த என்னால், தமிழகத்தில் 6.5 கோடி மக்களுக்கு எளிதாக திட்டங்கள் வகுக்க முடியும். எனக்கு வெறி பிடித்திருக்கிறது.
அது, பா.ம.க., ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வெறி. இரண்டரை கோடி வன்னியர்கள் உள்ள தமிழகத்தில் பா.ம.க., ஆட்சியை பிடித்தால் மட்டுமே என் வெறி அடங்கும். சட்டசபை தேர்தல் கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம். பா.ம.க., தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. வெற்றிக்காக ராமதாஸ் நல்ல முடிவு எடுப்பார் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக