கட்சி வளர்ச்சிக்கு ஒரு மணி நேரம் செலவிடுங்கள்: பாமக நிறுவனர் ராமதாஸ்


        

          பாமக நிறுவனர் ராமதாஸ் பேரன் சுகந்தன்-டீனா திருமண விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்துகொண்டார்.
இவ்விழாவில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,
 
              ’’நேரம் தவறாது காரியம் செய்து முடிப்பவர் முதல்வர் கருணாநிதி. அவரைப் பார்த்து நான் நேரம் தவறாமையை நான் கடைப்பிடிக்கிறேன். அவர் முதல்வராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நான் எந்த காரியத்தை தொடங்கினாலும் என் உள்ளம் அவரைத் தான் நினைக்கும்.  நான் தொடங்கிய தொலைக்காட்சி, பத்திரிகை, கல்வி அறக்கட்டளை, பண்ணிசை மன்றம் அனைத்திற்கும் அவரைத் தான் அழைத்தேன். அவர்தான் தொடங்கி வைத்தார். சில நேரங்களில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இருந்து அரசியல் இலக்கணத்துக்கு ஏற்ப சற்றும் பிசகாமல் நடந்துள்ளேன்.

          ஆனால் எங்கள் நட்பும் பாசமும் இன்னும் இருக்கிறது. என்றும் இருக்கும். நான் திருமண அழைப்பிதழ் கொடுக்க அவரிடம் மகிழ்ச்சியோடு சென்றேன்.  மகிழ்ச்யோடு திரும்பி வந்தேன்.   31 தொகுதிகளை அள்ளி வந்துவிட்டேன் என்று சிலருக்கு வருத்தம். ஆனால் பாட்டாளி சொந்தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி பாட்டாளி மக்களும், உழைக்கும் கரங்களும் இல்லாமல் ஆட்சி அமைவதில்லை. 6-வது முறையாக கலைஞரை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்று எல்லோரும் துடிக்கிறார்கள்.

              யார் எப்படி சதிவலை பின்னினாலும் அதை தூள் தூளாக்கி செய்து முடிக்க பாட்டாளி கரங்கள் இணைந்திருக்கிறது. நீங்கள் ஆட்சி பொறுப்பு ஏற்ற போது 5 ஆண்டுகாலம் நிபந்தனையின்றி உறுதுணையாக பாதுகாப்பு அரணாக இருப்போம் என்று சொன்னோம்.   நாங்களும் ஒரு அரசியல் கட்சி என்பதால் பொறுப்புள்ள தோழமை கட்சியாக இருந்தாலும் சிலவற்றை எடுத்துரைக்க தவற மாட்டோம். அதை நீங்கள் அறிவீர்கள்.

               நான் எனது கட்சிகாரர்களிடம், “கட்சி வளர்ச்சிக்கு ஒரு மணி நேரம் செலவிடுங்கள். குடும்பத்தோடு மகிழ்வுடன் இருங்கள்” என்று அடிக்கடி சொல்வேன். அந்த வகையில் கலைஞர் குடும்ப பாசத்தோடு, பேரன்- பேத்திகளோடு குதூகலித்து வாழ்வாங்கு வாழ்த்து கொண்டிருக்கிறார். சில பேருக்கு அது பொறாமையாக இருக்கிறது. அதற்கு என்ன செய்ய முடியும். யாரும் எதுவும் செய்ய முடியாது. கொள்ளுப் பேரன் திருமணத்தையும் நான் நடத்த வேண்டும் என்று கலைஞர் குறிப்பிட்டார். ஆனால் நான் இருக்கிறேனோ இல்லையோ 100 ஆண்டுகளையும் கடந்து கலைஞர் வாழ்ந்து தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

                 தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கி தமிழ்நாட்டில் பசி-பட்டினி இல்லாத நிலையை ஏற்படுத்தி இருக்கிறார். அடுத்த முறை ஆட்சிக்கு வரும்போது வேளாண்மை முதன்மையாக இருக்கவேண்டும். எல்லோருக்கும் தரமான கல்வி கிடைத்து விட்டால் இட ஒதுக்கீடு தேவை இல்லை அதை நோக்கி நாம் சொல்ல வேண்டும்’’என்று பேசினார். 




0 கருத்துகள்: