செப்டம்பர் 17 வன்னிய இட ஒதுக்கீடு தியாகிகள் தினம்: மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்த ஜி.கே.மணி வேண்டுகோள்

பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

                  இடஒதுக்கீடு கோரி ஒருநாள் சாலை மறியல் போராட்டம், ஒருநாள் இரயில் மறியல் போராட்டம், நூற்றுக்கும் மேற்பட்ட மாநாடுகள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள் போன்றவை நடத்தப்பட்டன. அதன் நிறைவாக 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி தந்தை பெரியாரின் பிறந்த நாளில் தொடங்கி ஒருவாரத்திற்கு தொடர் சாலை மறியல்  போராட்டம் நடத்தப்பட்டது.

              அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 21 பேரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட் டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வாறு 7 நாள் சாலை மறியல் போராட்டத்தில் 21 உயிர்களை பலி கொடுத்து ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்டோர் சிறை கொடுமைகளை அனுபவித்து 107 சமுதாயத்தினருக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு பெறப்பட்டது தமிழக வரலாற்றில் மிகப்பெரிய சகாப்தம்.

             தமிழக வரலாற்றில் மறக்க முடியாத இந்த இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளின் நினைவு நாள் நாளை மறுநாள் செப்டம்பர் 17ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.  இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகளின் நினைவு நாளை தமிழகம் முழுவதும் உள்ள நமது இயக்கத்தைச் சேர்ந்த அனைவரும் தங்களது வீடுகளில் கடைப்பிடிக்க வேண்டும். மெழுகுவர்த்தி ஏற்றி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டும். ஆங்காங்கே மெழுகுவர்த்தி ஊர்வலங்களும், பிற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜி.கே.மணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

0 கருத்துகள்: