காஞ்சீபுரம் :
2020ல் பா.ம.க. ஆட்சியை பிடிக்கும் என, பாமக தலைவர் ஜி.கே.மணி கூறினார். காஞ்சீபுரத்தில் பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்.
கூட்டம் முடிந்த பிறகு பேசிய பாமக தலைவர் ஜி.கே.மணி,
ஆந்திர மாநிலம் குப்பம் அருகே கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு அணை கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே பாலாறு வறண்ட நிலையில் உள்ளது. அங்கு அணை கட்டினால் தமிழகத்துக்கே பேராபத்து ஏற்படும். எனவே இந்த அணை கட்டும் முயற்சியை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து எதிர்க்கவேண்டும்.
கர்நாடகத்தில் சில தினங்களுக்கு முன்பு அசாதாரண சூழ்நிலை நிலவியது. எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். அந்த சூழ்நிலையிலும், தமிழகத்துக்கு காவிரி நீரை விடவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறிய போதும், அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து கூடி ஆலோசித்து தமிழகத்துக்கு தண்ணீர் விட முடியாது என்று தீர்மானம் போட்டுள்ளது. தமிழகத்திலும் காவிரிநீர், பாலாறு அணை போன்ற பொதுப்பிரச்சினைகளில் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். அப்போது தான் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முடியும்.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள கலைஞர் வீடு கட்டும் திட்டம் நல்ல திட்டம் தான். ஆனால் கட்டுமானப் பொருட்கள் விலை உயர்ந்து விட்டது. அவற்றை வாங்க முடியாமல் மக்கள் திணறுகின்றனர். லாரியில் திருட்டுத்தனமாக மணல் எடுப்பவர்களை அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. ஆனால் டயர் வண்டியில் மணல் எடுத்துச்செல்லும் ஏழை விவசாயிகளை பிடித்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கின்றனர். அதிகாரிகளின் இது போன்ற செயலை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக மக்கள் மனது வைத்தால் 2020ல் பா.ம.க. ஆட்சியை பிடிக்கும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக