பாமக பேனர் கிழிப்பு: கலிவரதன் எம்.எல்.ஏ. தலைமையில் மறியல்

திருக்கோவிலூர்:

               மணம் பூண்டிக்கு வருகைதர இருக்கும் பாமக நிறுவனர் ராமதாசை வரவேற்று கலிவரதன் எம்.எல்.ஏ. பல்வேறு பகுதிகளில் பேனர் வைத்திருந்தார். நேற்று நள்ளிரவு சில மர்ம மனிதர்கள் 4 பேனர்களை கிழித்து விட்டு ஓடி விட்டனர். இன்று காலை இதைப் பார்த்து கலிவரதன் எம்.எல்.ஏ. அதிர்ச்சி அடைந்தார்.

           பேனர்களை கிழித்தவர்களை கைது செய்யக்கோரி மணம்பூண்டி கூட்டு ரோட்டில் காலை 8.10 மணிக்கு தொண்டர்களுடன் அவர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார். மறியலில் முகையூர் ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார், மாவட்ட துணை செயலாளர் பாலசக்தி, சீனு கவுண்டர், தலைமை செயற் குழு உறுப்பினர் டி.எஸ். ராஜேந்திரன் ஒன்றிய செயலாளர்கள் வெங்க டேசன், சுப்பிரமணி, பழனிசாமி, சிவலிங்கம், நகர செயலாளர் குப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

              தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் அங்கு விரைந்து சென்று சமரசம் பேசினார்கள். பேனர்களை கிழித்தவர்களை உடனடி யாக கைது செய்கிறோம் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து கலிவரதன் எம்.எல்.ஏ. போராட்டத்தை கைவிட்டார்.

0 கருத்துகள்: