பாமக திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடாது: பாமக நிறுவனர் ராமதாஸ்

கடலூர்:

              திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் பா.ம.க. போட்டியிடாது. எந்தக் கட்சிக்கும் ஆதரவும் அளிக்காது என்று பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.  

பா.ம.க. மாநில துணைத் தலைவர் ஈச்சங்காடு ப.சண்முகத்தின் மகன் முத்துக்கிருஷ்ணன்- உஷா நந்தினி திருமண விழாவில் கலந்துகொள்ள புதன்கிழமை கடலூர் வந்த பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூறியது:  

             திருச்சி மேற்கு சட்டப் பேரவை இடைத் தேர்தலில் பா.ம.க. போட்டியிடாது. அத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவும் அளிக்காது. புதுவை இந்திரா நகர் தொகுதி இடைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை பா.ம.க. ஆதரிக்கும். தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிடும். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு திராவிடக் கட்சிகளுடனும் இனி கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம்.

திருமண விழாவில் ராமதாஸ் பேசியது:  

                வன்னியர்கள் அதிகம் நிறைந்த பழைய தென்னார்க்காடு, வடஆர்க்காடு மாவட்டங்களில் 1952ல் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார், மாணிக்கவேல் நாயக்கர் ஆகியோர் தலைமையில் தனித்துப் போட்டியிட்டு, 26 சட்டப் பேரவைத் தொகுதிகளையும் 7 எம்.பி. தொகுதிகளையும் பெற்றனர் வன்னியர் சமூகத்தினர். ஆனால் அதன் பிறகு 1989ல் பா.ம.க. தொடங்கப்பட்டு பல்வேறு கட்சிகளுடனும் கூட்டணி சேர்ந்து இன்று கிடைத்து இருக்கும் இடங்கள் 3 சட்டப் பேரவைத் தொகுதிகள்தான். இடையில் என்ன நிகழ்ந்தது? அந்த உணர்வு எங்கே போயிற்று?  தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் வன்னியர்களுக்கு ஆளும் உரிமை கிடைத்தும் ஆள விடவில்லை. வாழவும் விடவில்லை. சிலர் அமைச்சர் பதவிக்கும் சிலர் எம்.எல்.ஏ. பதவிக்கும் ஓடினர். நான் என்றும் கட்சித் தலைவர் உள்ளிட்ட எந்த பதவிக்கும் வரமாட்டேன். நான் என்றும் பா.ம.க.வின் நிறுவனர்தான். 

                நாம் சென்ற பாதை தவறு என்று மாற்றிக் கொண்டோம். 1952ல் இருந்த நிலை இப்போது உள்ளது. இனி எந்தக் கட்சியுடனும் கூட்டு இல்லை. தேவையும் இல்லை.  இனி வன்னியர்கள் வேறு அரசியல் கட்சிகளுக்குச் செல்லத் தேவையில்லை. அவர்களுக்கு எல்லா பதவிகளும் காத்திருக்கிறது. வன்னியர் கிராமங்களில் இனி பா.ம.க.வும் வன்னியர் சங்கமும்தான் இருக்க வேண்டும். வேறு கட்சிகளுக்கு அங்கு இடமில்லை. வேறு கட்சிக் கொடிகள் பறக்கத் தேவையில்லை. வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க. தவிர வேறு எந்தக் கட்சிக் கொடியும் உங்களை உயர்த்தாது.  எந்த இளைஞரைக் கேட்டாலும், நான் பா.ம.க., நான் வன்னியர் சங்கம் என்று சொல்லும் நிலை வரவேண்டும். திராவிடக் கட்சிகளால், திராவிட இயக்கங்களால் தமிழ்நாடு சீரழிந்து விட்டது என்றார் ராமதாஸ்.


0 கருத்துகள்: