சென்னை:
பூமி வெப்பமயமாதலைத் தடுப்பது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ள தலையாய கடமையாகும் என பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி கூறினார். புவி வெப்பம் அதிகரிப்பதைத் தடுக்க பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பாக 350 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி பேசியது:
புவி வேகமாக வெப்பமடைந்து வருவதன் விளைவாக ஏற்படும் காலநிலை மாற்றத்தால் மிகப் பெரிய ஆபத்துகள் உண்டாகும். இந்த நிலை நீடிக்குமேயானால் எதிர் காலங்களில் மனித சமுதாயமே அழியக்கூடும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதிக அளவில் வெளியேற்றப்படும் கரியமில வாயுவே இதற்கு முக்கிய காரணமாகும். இதன் காரணமாக, வளிமண்டலத்தில் கரியமிலவாயுவின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த அளவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
மரங்களை அதிக அளவு வளர்ப்பதன் மூலமாகவே எதிர் வரும் பேரழிவிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். பூமி வெப்பமடைவதற்கு அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளே காரணமாக இருக்கிறது. தனி நபர் அளவில் பார்க்கும் போது மற்ற நாடுகளை விட பத்து மடங்கு அதிகமான கரியமில வாயுவை வளர்ந்த நாடுகள் வெளியிடுகின்றன. ஆனால், இந்தியா உள்ளிட்ட நாடுகளே இதனால் அதிகமாக பாதிப்படுகின்றன. பூமி வெப்படைதலைத் தடுப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் ஐ.நா. சபையின் காலநிலை மாற்றப் பிரிவினால் நடத்தப்பட்டு வருகின்றது.
வரும் டிசம்பர் மாதம் மெக்சிகோவில் நடைபெறும் மாநாட்டில் இறுதி ஒப்பந்தம் எட்டப்பட இருக்கிறது. இது இந்தப் பிரச்னையை தீர்க்க நல்ல வாய்ப்பாக அமையும். பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு இதற்கு தீர்வு காண வேண்டும. பூமி வெப்பமயமாதலைத் தடுப்பது ஒவ்வொரு தனி மனிதனின் தலையாய கடமையாகும் என்றார் அவர். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மரம் நடும் விழாவில் கலந்து கொண்ட அந்த அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக